வெள்ளத்தின் பிடியில் ஈரான் தத்தளிப்பு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

199 0

ஈரான் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தத்தளிக்கிறது. அங்கு நிலைமை மோசமாகி வருவதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

ஈரான் நாட்டில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு மழை வெளுத்துக்கட்டுகிறது.இந்த மழையால் 1,900 மாநகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. தாழ்வான பகுதிகளில் தொடர்ந்து வெள்ளம் நீடித்து வருகிறது.

மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
70 பேர் பலி
இந்த மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர்.
குஜஸ்தான் மாகாணம் பெருத்த சேதத்தை அடைந்துள்ளது. 50 ஆயிரம் பேர் வசித்து வந்த சூசன்கெர்டு நகரில் மழை இடைவிடாது பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.
இதே நிலைதான் பல நகரங்களில் உள்ளது.
ஏற்கனவே பாதிப்புக்குள்ளான 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேறிவிட்ட நிலையில், நேற்றும் வெளியேற்றம் தொடர்ந்தது.
குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கிறது. அதே நேரத்தில் ஆண்களை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுத்துகிறது.
86 ஆயிரம் பேர் தங்க வைப்பு
இதுவரை 86 ஆயிரம் பேர் நெருக்கடி கால தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு மாகாணங்களில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
ஈரானில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் வெள்ள நிவாரண பணிகளில் அரசுக்கு பக்க பலமாக உள்ளன. அவர்கள் தங்கள் குழாய்களை பயன்படுத்தி வெள்ள நீரை அகற்றி வருகின்றனர்.
பொருளாதார தடையால் சிக்கல்
எரிசக்தி, வங்கித்துறைகளில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், அரசின் செலவினம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது மீட்பு, நிவாரணப்பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் கூறுகையில், “ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள பொருளாதார தடைகள், நிவாரண உதவிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. மீட்பு ஹெலிகாப்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஒருவகையான பொருளாதார பயங்கரவாதம்தான்” என குறிப்பிட்டார்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என ஈரான் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.