அ.தி.மு.க. அணி அற்புதமான தம்பதி: தி.மு.க. அணி விவாகரத்தான கூட்டணி – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

631 0

நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணி என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 24 கட்சிகளை சேர்த்துக்கொண்டு, பிரதமர் வேட்பாளராக 24 பேரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியினர் மட்டுமே மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் எனக்கூறி வாக்கு கேட்கிறோம். எம்.பி. தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் வந்து விடும். இந்த தேர்தலில் கோட்டை விட்டால் பின்னால் அந்த ஓட்டையை அடைப்பது கடினம்.

நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணி. இந்தியாவின் இரும்பு மனிதர் பிரதமர் மோடி தான். அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “டி.டி.வி.தினகரன் அணி கரைந்து கொண்டிருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் வருவதற்குள் அங்கிருந்து வெளியேறி விடுவார். தினகரன் தேனியில் நின்றால் 20 ரூபாய் டோக்கனை கொண்டு கேள்வி கேட்பார்கள். அதனால் நிற்கவில்லை. இந்த தேர்தலோடு அ.ம.மு.க.விற்கு மூடுவிழா நடத்திவிட்டு அனைவரும் அ.தி.மு.க.விற்கு வந்து விடுவார்கள்” என்றார்.