வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

262 0

வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்ட மக்களே இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

 முல்லைத்தீவு சிறுவர் பூங்காவில் இருந்துபேரணியாக வந்த இம்மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு வழங்கப்பட்ட வீடுகள் உரிய தரத்தில் இல்லை என மாவட்ட அரசாங்க அதிபரால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமக்கான வீடுகளை விரைவாக அமைத்துத் தர வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், வீடமைப்பு அதிகார சபையுடன் கலந்துரையாடி விரைவில் வீடுகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாக அரசாங்க அதிபரை சந்தித்த மக்கள் குறிப்பிட்டனர்.