அமைதியான மனநிலையில் இருந்தால் சிறப்பாக விளையாடுவேன்- ஷிகர் தவான்

302 0

அமைதியான நிலையில் இருக்கும்போது நன்றாக விளையாடுவதாகவும், மனவேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறினார். 

கடந்த 6 மாதமாக சதம் அடிக்காத இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் 143 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்துக்கு விடை அளித்தார். போட்டிக்கு பிறகு ஷிகர் தவான் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- 

விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் நான் பத்திரிகைகள் படிப்பதில்லை. எனக்கு தேவையில்லாத விஷயங்களை எடுத்து கொள்ளமாட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. எனது சொந்த உலகில் நான் வாழ்கிறேன். எனது எண்ணங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன். 

அமைதியான நிலையில் இருக்கும்போது நான் நன்றாக விளையாடுவேன். மன வேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவேன். என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து எனது செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்புவேன். 

ரிஷப் பந்தை, டோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆஷ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்க வைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். பனியின் தாக்கம் காரணமாக பந்து கையை விட்டு நழுவியது. எனவே கேட்ச் செய்வது கடினமாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.