
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் 11, 12-ந் தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது. விருப்ப மனு அளித்தவர்கள் நேரில் வரவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் இடம்பெற இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தே.மு.தி.க.வுக்கும், த.மா.கா.வுக்கும் இன்னும் எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணலை நடத்த இருக்கிறது.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாராளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி விருப்ப மனு அளித்துள்ள கட்சி தொண்டர்களுக்கான நேர்காணல், 11-3-2019, 12-3-2019 ஆகிய 2 நாட்கள் நடைபெற இருக்கிறது.
11-ந் தேதி காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கும், மாலை 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது.
12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளுக்கும், மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி, தங்களுக்கு மட்டும் விருப்ப மனு அளித்துள்ள தொண்டர்கள் அனைவரும், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தவறாமல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதியான பிறகு, அந்த தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட்ட பிறகே அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

