மட்டக்களப்பில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவு

257 0

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஒடு எலும்புக் கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசாருக்கு நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார். 

சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது குழியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புககளும் வெளிவந்தன. 

மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து நேற்று வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற நீதவான் இந்த மனித மண்டை ஓடு மற்றும் ஒலும்புகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். 

இதனையடுத்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் ஒருவருடையது எனவும் இவற்றை பொதிசெய்து கொழும்பிற்கு இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமைய பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.