ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?

440 0

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகியிருந்தன. குறித்த மகாநாட்டின் போது வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணம் ஒன்றே மேற்படி அதிருப்திகளுக்கான காரணம். அந்த ஆவணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவின் கொலை உட்பட, டெலோ இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வேண்டுமென்றே விடுதலைப் புலிகளை அவமானப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விடயம் என்று கூறுகிறது. அதாவது, குறித்த ஆவணம் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படவில்லை ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே அவ்வாறானதொரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கூறுகிறது. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, குறித்த ஆவணம் 2015இல் இடம்பெற்ற தியாகிகள் தினத்தின்போது வெளியிடப்பட்;டதாகவும், அப்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அதில் பங்குகொண்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணம் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தங்களது வரலாறு தொடர்பில் பேசலாம் ஆனால் அதில ;பகை முரண்பாடுகளை முதன்மைப்புடுத்தும் வகையில் பேசுவது தவறாகும். பத்மநாபா டெங்கு காய்சலால் மரணிக்கவில்லை. அதே போன்று டெலோவின் தலைவர் சபாரத்தினமும் வயிற்றுவலியால் இறக்கவில்லை. இது இயக்க மோதல்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நடந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோவிற்கும் கடுமையான விமர்சனங்களுக்குரிய ஒரு பக்கம் உண்டு. அவ்வாறான பல கசப்பான சம்பவங்களை புறம்தள்ளித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஈ.பி.ஆர்.எல்.எப். டெலோ ஆகிய இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டனர். அவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனவே பழைய விடயங்களை பேசுவதும் அவை தொடர்பில் விவாதங்களை ஏற்படுத்த முயற்சிப்பதும் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது.

இந்த விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பக்கம் தவறு இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் திட்டமிட்டு இந்த விடயத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் விளங்கிக்கொள்ள கூடிய ஒன்றே! ஏனெனில் விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக பங்குகொண்டிருக்கும் ஒரு நிகழவில் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதால் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது ஏனெனில், ஈ.பி.ஆர்.எல்.எப் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே வெண்ணை திரண்டுவருகின்ற சூழலில் பானையை போட்டுடைக்க வேண்டிய தேவை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு நிச்சயம் இருந்திருக்காது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இது ஒரு பாரதூரமான விடயமாக உற்றுநோக்கப்படாது என்னும் எண்ணமே அவர்களை வழிநடத்தியிருக்கிறது. ஏனெனில் இது வெளியிடப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த நான்கு வருடங்களில் இந்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதை எவருமே வாசித்திருக்கவில்லை. இதிலிருந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் எந்தளவு அறிவுபூர்வமாக சிந்திக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. இந்த விடயம் தொடர்பில் முதல் முதலாக சுமந்திரன்தான் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான் இந்த விடயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாலும் பேசப்பட்டிருக்கிறது.

2015இல் தாமும் பங்குகொண்ட ஒரு நிகழ்வின் போது வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தை கூட்டமைப்பின் தலைவர்கள் எவருமே வாசித்திருக்கவில்லை. இவ்வாறானவர்கள் இலங்கை தொடர்பான சர்வதேச ஆவணங்களை வாசித்திருப்பார்கள் என்று எப்படி நம்பலாம்? தவிர, இதன் மீது விமர்சனங்களை வைப்போரும் கூட, அந்த ஆவணத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்திருக்கவில்லை. இதிலுள்ள ஆகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், நான்கு வருடத்திற்கு முன்னர் இவ்வாறானதொரு ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்ட பின்னர்தான் கஜேந்திர குமார், ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலின்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவை சுரேஸ் எடுக்கும் வரையில், அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இருவருமே கூட்டாக பயணிப்பதில் நம்பிக்கையுடனும் இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவரது வீட்டில் இது தொடர்பில், பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் குறித்த ஆவணம் தொடர்பில் அப்போதெல்லாம் எவரமே பேசியிருக்கவில்லை. மேலும் அதை தவறென்றும் எவரும் கூறவுமில்லை ஆனால் குறித்த ஆவணத்தில் விக்கினேஸ்வரன் கைப்படதும் அது தவறான ஒன்றாகத் தெரிகிறது. இதன் பொருள் என்ன?

EPRLF

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் வேறு. அதாவது இப்போது பிரச்சினை குறித்த ஆவணம் அல்ல. குறித்த நிகழ்வில் விக்கினேஸ்வரன் பங்குகொண்டதுதான் பிரச்சினை. ஆனால் விக்கினேஸ்வரன் தன்னுடைய அறிக்கையில் அவ்வாறானதொரு ஆவணம் எதனையும் தான் வெளியிட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் இந்த விடயத்தை சுமந்திரன் பெரிதுபடுத்த வேண்டும்? இதனால் சுமந்திரனுக்கு என்ன நன்மை? சுமந்திரன் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் உள்ள ஒருவரல்ல. இரா.சம்பந்தன், 2012 டிசம்பர் 7, அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றில், விடுதலைப் புலிகள் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றதாகவும் பல சிவிலியன் தலைவர்களை கொன்றதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தனது தலைவரின் மேற்படி உரை தொடர்பில் சுமந்திரன் மட்டுமல்ல விடுதலைப் புலிகள் மீது தங்களுக்கு பெரும் பற்றிருப்பதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் எவருமே, இதுவரை சம்பந்தனை தவறென்று கூறமுன்வரவில்லை. சம்பந்தன் தனது கூற்றுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்று கூறவில்லை. சம்பந்தன் சிங்கக் கொடியை உயர்த்தியதற்காக யாழ்பாணத்தில் மன்னிப்பு கேட்ட மாவை சோனதிராஜா இன்றுவரை, குறித்த உரை தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் தொடர்பான சம்பந்தனின் உரையுடன் அனைவரும் ஒத்துப் போகின்றனர் என்பதுதானே பொருள். அவ்வாறான கூட்டமைப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வெளியீடு தொடர்பில் நீலிக்கண்ணீh வடிப்பதன் பின்புலம் என்ன?

உண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருந்த ஆவணம் அல்ல இங்கு பிரச்சினை. விக்கினேஸ்வரனின தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமைதான் இங்கு பிரச்சினை. மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்துவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் சுமந்திரன் இது தொடர்பில் அக்கறைப் பட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனை ஓரங்கட்ட வேண்டுமென்று விரும்பியவர்களும் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்னும் இலக்கில் தங்களை அரசியல் எதிரிகளாக கருதிக்கொள்பவர்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றனர். மேலும் இந்த மகாநாட்டில் பெருந்தொகையானவர்கள் பங்குகொண்டிருந்ததும் அத்துடன், அது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த முறையும் சிலருக்கு கலக்கத்தை கொடுத்திருக்கலாம். இந்த மகாநாட்டை பார்த்து நான் அச்சப்படவில்லை என்றும் சுமந்திரன் குறித்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவ்வாறாயின் அவர் அதனை பார்த்து அச்சப்பட்டிருக்கிறார் என்பதுதானே அதன் உண்மையான அர்த்தம். பாம்பு கடிப்பது பயத்தின் காரணமாகவே! சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏறக்குறைய காலாவதியாவிட்டார் என்னும் ஒரு கருத்து உண்டு. ஆனால் அந்த மகாநாடு அவ்வாறான கருத்துகளுக்கு மாறாக இருந்திருக்கிறது. குறித்த மகாநாடு தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இது தொடர்பில் அனைத்துலக ஈழத் தமிழ் மக்களவையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறித்த ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வேண்டுமென்றே வெளியிட்டிருக்கிறது என்ற வகையில் மக்களவை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை கண்டித்திருக்கிறது. மேலும் விக்கினேஸ்வரன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர். மக்களவையின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். இன்றைய சூழலில், இவ்வாறானதொரு சர்ச்சை தேவையற்ற ஒன்று என்பதில் மக்களவையின் வாதம் சரியானது. ஆனால் இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இது தொடர்பில் விவாதங்கள் செய்வது விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று தலைமையைத்தான் பலவீனப்படுத்தும். விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் அரசியலில் ஒரு மக்கள் குரலாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. முக்கியமாக தமிழரசு கட்சி விரும்பவில்லை. தமிழரசு கட்சி விரும்பும் ஒன்றை, எவ்வாறு, தமிழரசு கட்சியை கொள்கை அடிப்படையில் எதிர்ப்பவர்களும் விரும்ப முடியும்? மக்களவை போன்ற பலமான புலம்பெயர் அமைப்புக்கள் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமை தொடர்பில் சிந்திப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். இன்றைய சூழலில் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்துவது என்பது மாற்றுத் தலைமையை மட்டுமல்ல அதற்கான சிந்தனை ஓட்டத்தையும் இல்லாமலாக்குவதுதான். ஈ.பி.ஆர்.எல்.எப் மகாநாடு ஒரு சந்தர்ப்பம் மட்டும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில்தான் பலரும் ஒற்றுமையாக பயணிக்கக் கூடிய வாய்ப்புண்டு. ஏனெனில், இன்றைய சூழலில் விக்கினேஸ்வரன் வெறுமனே, ஒரு தனிநபரல்ல மாறாக மாற்றுத் தலைமை ஒன்றிற்கான அஸ்திபாரம்.

யதீந்திரா