ஆட்சி 2 ஆண்டு நிறைவு சாதனை மலர் வெளியீடு!

303 0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்தது,

புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடி நிவாரணப் பணிகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் என எண்ணற்ற மக்கள் நலத்திட்டப்பணிகளை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், ஒட்டுமொத்த செயல்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு இந்தியா டுடே பத்திரிகையின் நான்கு விருதுகள்,
நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்தமைக்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, பெங்களூரூவைச் சேர்ந்த பொது விவகார மையம் என்ற அமைப்பு சார்பில் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆளுமையில் இரண்டாமிடம், பொது வினியோகத்திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்கியதற்காக விருது,
கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள், “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது என பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.
அதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் – “சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு” என்ற இரண்டாண்டு சாதனை மலர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், சட்டசபையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், முதல்-அமைச்சரின் பொன்மொழிகள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்பட குறுந்தகட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். பின்னர் காலப்பேழை புத்தகத்தை முதல்- அமைச்சர் வெளியிட, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், இரண்டாண்டு சாதனைகளின் குறும்படத்தை பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர்கள் எஸ்.பி.எழிலழகன் (செய்தி), உல.ரவீந்திரன் (மக்கள் தொடர்பு), இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.