தென்கொரியாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை- மருத்துவ உதவியாளர் கைது

270 0

தென்கொரியாவில் 1000க்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோதமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டில், மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்கொரியாவின் சியோலில் உள்ள ஜூங்ரங் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 70 வயது நிரம்பிய மருத்துவ உதவியாளர் ஒருவர், கடந்த (2015-2018) மூன்று ஆண்டுகளாக, 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உடல் அழகிற்காக செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை சட்டத்திற்கு புறம்பாக செய்து வந்துள்ளார். 

இந்த சட்ட விரோதமான சிகிச்சை மூலம் அவர் இதுவரை சுமார் 1 பில்லியன் ஒன் (9 லட்சம் அமெரிக்க டாலர்) சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மருத்துவ உதவியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை உரிமையாளரான தலைமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவ உதவியாளர், மருத்துவமனைக்கு அருகில் உள்ள அழகு நிலையம்  மற்றும் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்ககளைக் கவர்ந்து, அவர்களுக்கு முகம், உதடு மற்றும் இரட்டை கண்ணிமை போன்ற பல அறுவை சிகிச்சைகளை சட்டவிரோதமாக செய்துள்ளார். 

தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் செய்ததால், மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களும் அந்த உதவியாளரை  உண்மையான மருத்துவராகவே நினைத்துள்ளனர். இந்த செய்தியை தலைமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உதவியாளர் இருவரும் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், உதவியாளரும்  தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment