சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்

355 0

கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருப்பதாவது:- 

சென்னை மாநகரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மழைநீர் தேக்கங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சரிவர சுத்தம் செய்வதும் கிடையாது. சென்னை மாநகரம் முழுவதும் பழுதடைந்த, பயன்படுத்தப்படாத கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்படுகின்றன.

அதுபோன்ற வாகனங்களினால்தான் அதிக அளவு டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. எனவே டெங்கு கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கு கடந்த 4-ந்தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய்களை தூர்வார ரூ. 1,034 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகளில் இருந்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் கொட்டினால், அது மலைபோல காட்சியளிக்குமே? எனவே, அந்த கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’ என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி ‘10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகளை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது. அவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் எந்திரங்கள் மூலம் உடனுக்குடன் சமம் செய்யப்படுவதால், மலை போல் அது காட்சி அளிக்காது’ என்றார். மேலும், மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மாநகராட்சி சுகாதாரத்துறை கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுகிறது. கட்டிட கழிவுகளும் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க 587 தெளிப்பான் எந்திரங்கள் மாநகரம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 8,266 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சுமார் 4 லட்சம் பேர் சிகிச்சை பெற்றனர். 6 ஆயிரத்து 288 பேருக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. மேலும், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ப கழிவுகளை கொட்டாத நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பி.சதீஷ்குமார், ‘மாநகராட்சி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் 515 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கைத்தான் இது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை சேர்த்து பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே, இந்த பதில் மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர். 

Leave a comment