ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸ்னி நகரில் அமெரிக்க சிறப்பு படை வீரர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வீரர்கள் வாகனத்தில் சென்றபோது நெடுஞ்சாலையோரம் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்ததாரர் என 4 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க கூட்டுப் படையைச் சேர்ந்த 12 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.