யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை -சிவாஜிலிங்கம்

277 0

தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே  போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்தவை பிரதமராக கொண்டு வந்ததற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. இதற்கடுத்ததாக யாரைப் பிரதமராகக் கொண்டு வரவேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பு தெரிவு செய்யவேண்டியது இல்லை யாரைக் கொண்டு வந்தாலும் அது எமக்குப் பயன்படாத விடையமாகவே இருக்கும். தற்போதைய சூழல் அதிகாரத்தை யார் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கே இன்றைய நிலையுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலநிலே  அக்கறை செலுத்தவேண்டுமே தவிர யார் பிரதமர் என்பதில் இல்லை .

கடந்த 26 ஆம் திகதி மஹிந்த பிரதமராக  நியமியக்கப்பட்டது அரசியல் அமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது எனத் தெரிவித்தே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. ஆனால் இவர்களுக்குள் நடக்கின்ற அதிகாரப் போட்டியிலே இன்னெரு தரப்பை ஆதரிக்கவேண்டிய நிலைமையில் தமிழர் தரப்பு இல்லை என்றே கூறிக்கொள்ளவேண்டும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் எதிர்பார்த்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட நில விடுவிப்பு என அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முறைப்பாடியாக தீர்வு காணப்படவில்லை.

இனிமேல் ஏற்படப்போகும் அரசாங்கம் பலவீனமானதாகவே இருக்கும் இவ்வாறான அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைப்பது பயன்தரக்கூடியதாக இருக்குமா என்றால் அது யோசிக்கவேண்டிய விடையமே. இத்தகைய பலவீனமான அரசிற்கு நாங்கள் ஆதரவு அளிப்பதன் மூலம் எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கம் வரும் சூழலில் அல்லது தமிழ் மக்களுடைய பலத்தை வைத்து மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது என்பது வேறு தற்பொழுது இவரை அல்லது அவரை  ஆதரவு அளிப்பது என்பது அறிவுடமை மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்ததுடன் எங்களுடைய கடமை முடிவடைந்து விட்டது.

இன்னொருவரை பிரதமராக கொண்டு வருவதா இல்லையா என்பது தொடர்பில் அவர் மீது நம்பிக்கை அளிப்பதா இல்லையா என்பதும் எங்களுடைய விடையம் அல்ல என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன் என்றார்.

Leave a comment