கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் பக்தர்கள் முகாமில் தவிப்பு

228 0

கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பத்ரிநாத் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளது.

சாலைகளில் பனித்துகள்கள் படர்ந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற ஒடிசாவை சேர்ந்த 42 பேர் முகாமில் சிக்கி உள்ளனர்.

அவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு முகாம் திரும்பிய நிலையில், பனிப்பொழிவு காரணமாக முகாமில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு சிக்கிக்கொண்டனர். கடந்த சனிக்கிழமை இரவு முதல் அவர்கள் அனைவரும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முகாம் இருளில் மூழ்கியதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்து உள்ளது.

Leave a comment