விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

324 0

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் வெளியிடப்பட்டுள்ள அநாமதேய துண்டுப்பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தைக் குழப்புகின்ற நோக்கத்தைக் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யார் எந்தக் குழப்பத்தைச் செய்ய முற்பட்டாலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தலைவர் வழியில் மாபெரும் மீளெழுச்சி என்று தலைப்பிடப்பட்டு அந்த துண்டுப் பிரசுரம் யாழ். நகரின் பல்வேறு இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த துண்டுப் பிரசுரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

Leave a comment