வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

328 0

ariyanenthiranகிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு தூண்டிவிட்டதனாலேயே, தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குரோத மனப்பான்மை பரவும் என்ற அச்சம் காரணமாகவே வட பகுதியில் இருந்த முஸ்லிம் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.

ஆகவே முஸ்லிம் இளைஞர்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அரசாங்கம். குறிப்பாக அம்பாறை வீரமுனைப் படுகொலையில் முஸ்லிம் ஊர்காவற்படையினர் நேரடியாகப் பங்குபற்றியிருக்கின்றார்கள்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற படுகொலை அனைத்திலும் முஸ்லிம் ஊர்காவற்படையினர் இருந்திருக்கின்றார்கள். இதில் அரசாங்கம் வெற்றி பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணம் வரை முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு குரோத மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களே தவிர திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை எனவும் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.