துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: கவர்னர் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

214 0

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். தற்போது பணியில் உள்ள தகுதியற்ற 8 துணைவேந்தர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறையை ஊழல் என்ற கொடிய நோய் சிதைத்து வருவதை கவர்னர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது ஆக்கப்பூர்வமான திருப்பமாகும்; இது வரவேற்கத்தக்கது.

துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்துள்ளது உண்மை என கவர்னர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நடந்த தவறை சரி செய்யவும், அந்த தவறுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் கவர்னர் என்ன செய்தார்? என்பது தான் பா.ம.க. எழுப்பும் கேள்வி ஆகும்.

இப்போதுள்ள துணைவேந்தர்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் முந்தைய கவர்னரின் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக நியமிக்கப்பட்டவர். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் வள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி உள்ளிட்ட இப்போது பதவியில் உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அப்பதவிக்கு தகுதியற்றவர்கள்; கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தான் அப்பதவியைக் கைப்பற்றினர்.

இவர்கள் 8 பேரும் துணைவேந்தர்களாக பதவியேற்ற பின்னர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பல்கலைக்கழகங்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தார்கள் என்றும் பா.ம.க. குற்றம்சாட்டியது. துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்ததை கண்டுபிடிப்பது மட்டும் போதுமானதல்ல. நடந்த தவறுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் கவர்னரின் கடமை ஆகும்.

பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் இருந்தாலும், தேர்வுக்குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு துணைவேந்தர் நியமனத்தில் ஆதிக்கம் செலுத்துவது பல்கலைக்கழக இணைவேந்தர்களாக உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். உயர்கல்வித்துறை அமைச்சர்களாக கடந்த காலங்களில் இருந்தவர்களும், இப்போது இருப்பவரும் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தனர் என்பதை விசாரணை நடத்தினால் கண்டுபிடிக்கலாம்.

எனவே, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற அனைத்து வகையான ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக கவர்னர் உடனடியாக ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக உயர்கல்வி அமைச்சரை கவர்னர் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment