அரசியல் கைதிகள் என நாட்டில் எவருமில்லை – தலதா

198 0

அரசியல் கைதிகள் என்று யாரும் நாட்டில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இதேவேளை, அவர்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டி நீதிமன்றில் இன்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.  இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை. அரசியல் கைதிகள் இருப்பதாக யார் கூறுகின்றனர்?

சிறைச்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள்.

2009 ஆம் ஆண்டில் இருந்து இருப்பவர்களும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது வழக்குகள் இடம்பெற்று வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment