அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சாவு

262 0

அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் புளோரன்ஸ் நகரில் நேற்று முன்தினம் மாலையில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் ஒருவர், சில குழந்தைகளை சிறைப்பிடித்து ஒரு வீட்டில் பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டினார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த மர்ம நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் 7 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சண்டைக்குப்பின் அந்த மர்ம நபர் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், குழந்தைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே படுகாயமடைந்த போலீசாரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 6 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு கடந்த ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதைப்போல இந்த ஆண்டு இதுவரை 112 போலீசார் பணியின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a comment