‘தமிழக அரசுக்கு நிர்வாக திறமை அறவே இல்லை’!- மு.க.ஸ்டாலின்

231 0
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு சுமுகத்தீர்வு காண தமிழக அரசுக்கு நிர்வாக திறமை அறவே இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்று அனைவரையும் போராட்டக்களத்தில் தள்ளிவிட்டு, கோட்டையில் அமர்ந்து ‘கமிஷன்’, ‘கரப்ஷன்’, ‘கலெக்‌ஷன்’ போன்றவற்றில் மட்டுமே தீவிரமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட நிலுவைத் தொகையை, பணியாளர்களின் வங்கிக் கணக்கில் போடாதது, 1-12-2017-க்குப் பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 10 மாதங்களாக எந்தத்தொகையும் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. உள்ளிட்ட 10 போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் பல கட்டங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று (நேற்று) கோட்டையை நோக்கி பேரணி செல்வதற்கு முற்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதேபோல் ‘ஜாக்டோ – ஜியோ’ அமைப்பைச் சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். நவம்பர் 27-ந்தேதி நடைபெறப்போகும் மிகப்பெரிய போராட்டத்திற்கு முன்னோட்டமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தொடர்ந்து பல கட்டங்களில் வலியுறுத்தி, அதற்காகப் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. அதற்குப் பதிலாக அடக்குமுறைகளை ஏவிவிடுவது, சம்பளத்தைப் பிடிப்பது, கைது செய்வது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
நீதிமன்றமே உத்தரவிட்டாலும்கூட, வாக்குறுதிகளை வழங்கிவிட்டு போராட்டங்களை வாபஸ் பெற வைத்துவிட்டு, பிறகு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கைவிரித்து, மீண்டும் போராட்டக் களத்திற்கே திருப்பி அனுப்பும் அராஜக நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில், அவர்களுக்குரிய அன்றாட அரசுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியர்களின் பணி மகத்தானது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஆனால், இதுபற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாமல் திட்டமிட்டு அவர்களை வீதியில் இறங்கிப் போராடவைத்து, தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் ‘சேடிஸ்ட்’ மனப்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை அல்லது போராடப்போகிறோம் என்று முன்கூட்டியே முறைப்படி அறிவிப்பவர்களை அழைத்துப் பேசி சுமுகத்தீர்வு காண்பதற்கு இந்த அரசுக்கு வக்கும் இல்லை – அதற்குரிய நிர்வாகத் திறமையும் அறவே இல்லை என்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவாக அமைந்துவிட்டது.
ஆகவே, இனியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டக் களத்திற்கு விரட்டி அடிக்காமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையும், அராஜகமும் அணையப் போகும் தீபத்தின் கடைசி அடையாளங்கள் என்பதை, எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அ.தி.மு.க. அரசினை தாறுமாறாக வழி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment