திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

200 0

திரைப்படத் துறையையும் கலைஞர்களையும் பாதுகாப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அத்துறை சார்ந்த சகலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு சினிமாத்துறையின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி  தெரிவித்தார்.

 

நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற திரைப்படத் துறையினர் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரைப்பட விநியோக நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

திரைப்படங்களை காட்சிப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சட்டங்கள் கவனத்திற் கொள்ளப்படாமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தரமான திரைப்பட தயாரிப்புக்கும் அவற்றை காட்சிப்படுத்துவதற்கும் அரச அனுசரணை இன்றியமையாதது எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது

தேசிய திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

திரைப்பட காட்சிப்படுத்தலின் மூலம் கிடைக்கும் வருமானம் பகிரப்படும் வீதத்தின் ஏற்றத்தாழ்வுகள், திரையரங்குகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் நவீன மயப்படுத்துவதற்குமான திரையரங்கு உரிமையாளர்களின் நிதி பற்றாக்குறை, திரையரங்குகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய நிதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரியவாறு கிடைக்கப்பெறாமை,

வெளிநாட்டு திரைப்படங்களின் இறக்குமதி, காட்சிப்படுத்தல், விநியோகித்தல் நடவடிக்கைகள் முறையாக இடம்பெறாமை, தேசிய திரைப்பட துறையின் தர மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மற்றும் புதிய வரிக்கொள்கை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால சந்ததியினருக்காக திரைப்பட தயாரிப்புக்களை பாதுகாத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தர்மசிறி பண்டாரநாயக்க, சோமரத்ன திசாநாயக்க, ரவீந்ர ரந்தெனிய, இனோக்கா சத்யாங்கனி உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிக, நடிகைகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a comment