நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்கக் கோரி 2 வெவ்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்தார்.
இதற்கிடையில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தலைமை நீதிபதி அமர்வுக்கே அதிகாரம் உள்ளதாக ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதை அடுத்து தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, இதுகுறித்து ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் இதற்கான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் ஹெச்.ராஜா பேசியதற்கான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே கிடைக்கும் வகையில் இருப்பதாகவும், அதனை அவர் மறுக்க முடியாது என்பதாலும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஹெச்.ராஜாவை தண்டிக்க வேண்டுமென கோரிக்கையுடன் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹெச்.ராஜாவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் கண்ணதாசன் அனுப்பிய கடிதம் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க கோரி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கடந்த வாரம் கண்ணதாசன் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவை பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர் அக்டோபர் 3-ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதற்கு ஹெச்.ராஜாவுக்கு எதிரான வலுவான சாட்சியங்கள் உள்ளதால், அவரிடம் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும், அதனால் ஹெச்.ராஜாவின் கருத்தை கேட்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடக்கோரி கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.