தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுகதான்- சி.வி.சண்முகம் பேச்சு

256 0

தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 

விழுப்புரம் ஒருங்கிணைந்த வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி நேற்று இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர்.லட்சுமணன் எம்.பி., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.பி.க்கள் ராஜேந்திரன், காமராஜ், ஏழுமலை, மாநில அமைப்பு செயலாளர் மோகன், சக்கரபாணி எம்.எல்.ஏ., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மாநில அமைப்பு செயலாளருமான சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான நத்தம்  விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. அதற்கு உடந்தையாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு. ஆனால் இன்று தி.மு.க.வுடன் வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். இலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு உதவி செய்ததால்தான் போரில் வெற்றி பெற்றோம் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ராஜபக்சே வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
இதற்கு வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களா? யாருமே இதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே போர் குற்றவாளி என்றாலும் கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டுபவர்தான் குற்றவாளி.
தமிழினத்தை அழித்தது, தமிழினத்திற்கு துரோகம் செய்தது  தி.மு.க., எனவே ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கும் வரை அ.தி.மு.க.வின் போராட்டம் நீடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், கல்பர்ட் முத்தமிழ்செல்வன், சிந்தாமணி வேலு, கண்டமங்கலம் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.ஜி.சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல்,  மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைசெயலாளர்கள் வி.பி.எஸ்.குருநாதன், மந்தக்கரை ஜானகிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால்,  முன்னாள் யூனியன் சேர்மன்கள் பெரும்பாக்கம் இளங்கோவன், விஜயா சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனரும், ரியல் எஸ்டேட் அதிபருமான வக்கீல் செந்தில், மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர்.கலைச்செல்வன், கோலியனூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சீத்தாகலியபெருமாள், பவாணிதமிழ்மணி, இலக்கிய அணி செயலாளர் பெட்மார்ட் கலியமூர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மரகதபுரம் அழகேசன், மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், ஒன்றிய இணை செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர சபை தலைவரும், அ.தி.மு.க.வின் நகர செயலாளருமான வக்கீல் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Leave a comment