இடைத்தேர்தலில் பாஜக போட்டி: தமிழிசை!

228 0

இடைத்தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவதே பாஜகவின் விருப்பம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக செயற்குழுக் கூட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை ஒழிக எனக் கூறிக்கொண்டே சட்டம்-ஒழுங்கை மீறுவோரை வைத்து கட்சி நடத்துகிறார். அதிமுகவை திமுகவால் அசைக்க முடியவில்லை. அக்கட்சியால் பாஜகவை என்ன செய்ய முடியும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் திமுக சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமுக நாடகமாடி உள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் போட்டியிடுவதே பாஜகவின் விருப்பம். தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும்.

பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும் என்றார்.

Leave a comment