தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தவேளை வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கே நின்று முதியவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அதனை அவதானித்த பலரும் வைத்தியசாலைப் பணியாளரே அழைத்துச் செல்வதாக எண்ணியுள்ளனர். இந்நிலையில் முதியவரை அழைத்துச் சென்ற கர்ப்பிணிப்பெண், முதியவரின் கைளில் இருந்த தங்க மோதிரங்கள் இரண்டையும் அபகரித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.
முதியவர் குரல் எழுப்பிய நிலையில் குறித்த கர்ப்பிணிப்பெண் வேகமாக வெளியேறி வீதியில் பயணித்த பஸ்ஸில் ஏறித் தப்பியுள்ளார். இதனையடுத்து முதியவர் அங்கு நின்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.
இதனையடுத்து அங்கே நின்ற சில இளைஞர்கள் பஸ்ஸை விரட்டிப் பிடித்து அந்தப் பெண்ணை மடக்கினர்.
குறித்த பெண் இணுவிலைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளிள் மூலம் தெரியவந்துள்ளது.
முதியவரின் தங்க மோதிரங்கள் இரண்டும் மீட்கப்பட்டன.
பெண் தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.