மீண்டும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

324 0

02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தது.

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான மஹகமகே காமினியின் மகளுடைய சுகயீன நிலையை கருத்திற்கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் சந்தேகநபருக்கான பிணை மறுக்கப்பட்டதுடன், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட ரீதியான முறையில் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்வதற்காக, நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment