எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பஸ் கட்டணங்களை 10 வீதத்தால் அதிரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள சங்கத்தின் தலைவரான ஸ்டேன்லி பெர்னாண்டோ,கடந்த மே மாதம் முதல் பஸ் கட்டணம் 12.5 சதவீதம் அதிகரிப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்குள் அரசாங்கம் இதுதொடர்பில் தமது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 149 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 161 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது..

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 123 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 130 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் குழு நேற்று பிற்பகல் கூடிய போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.