கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

227 0

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.

இதில் மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க. தரப்பில் 11 பேரும், தி.மு.க. கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக மொத்தம் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க சார்பில் 11 பேரும் தி.மு.க. கூட்டணி சார்பில் 11 பேரும் மொத்தம் 22 பேரும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700 வாக்குகள், ராஜேந்திரன் 661 வாக்குகள், ராமகிருஷ்ணன் 649 வாக்குகள், ராமலிங்கம் 667 வாக்குகள், சிங்காரவேலு 641 வாக்குகள், கமலா 711 வாக்குகள், எம்.சுமித்ரா 697 வாக்குகள், ஆர்.சுமத்திரா 705 வாக்குகள், முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.

கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள். பவானி 213 வாக்குகள், கலா 225 வாக்குகள், தங்கமணி 258 வாக்குகள், அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால் கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்தது.

கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.

Leave a comment