நித்தியகலாவை தானே கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்

271 0

கிளிநொச்சியில், நித்தியகலாவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான,கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என்பவர், தானே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒப்புதல் வாக்கு மூலத்தில், குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது எனவும்,அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை தன்னுடையது எனவும், அதனால் குறித்த பெண் தன்னை கூட்டிச்செல்லுமாறு வற்புறுத்தியதாகவும்,பின்னர் நாம் இருவரும் நஞ்சு அருந்தி இறந்துவிடுவோம் என முடிவெடுத்தாகவும் கிருஸ்ணகீதன் குறிப்பிட்டார்.
28 ஆம் திகதி, நித்தியகலா கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், தான் தனது வீட்டில் இருந்து நடந்து சென்று அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டதாகவும், பின்னர் அம்பாள் குளம் வீதியூடாக, கிளிநொச்சி சென்று, உள் வீதிகளால் கரடிப்போக்கு சென்று, பின்னர் மீண்டும் உள் வீதிகளால், சம்பவ இடத்திற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நித்தியகலா மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கி வந்ததாகவும், அங்கு சென்றதும் குடிப்போம் என்ற வேளை,தமக்குள் சிறு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே, பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் இருந்தமையால், அவளது கழுத்தில்,தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்ததாகவும், அந்த பட்டியின் மூலமே, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், கிருஸ்ணகீதன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர், பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக்கூடாது என்பதற்காக, பாவாடை, மேற்சட்டை எல்லாவற்றையும் எடுத்துச் சென்றதாகவும், அவளது உடலை அருகில் இருந்த, வயல் கால்வாக்குள்,இழுத்துச் சென்று போட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும், அதனைத்தொடர்ந்து, கனகபுரம் பகுதியில் பாவாடையை எறிந்துவிட்டு, கான்பாக் மற்றும் மேல் சேட்டு என்பவற்றை, அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீடு சென்றேன் எனவும், பின்பக்காக இருக்கும் அறையில், மோட்டார் சைக்கிள் கெல்மற் என்பவற்றை ஒழித்து வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மருந்து குடித்து இறந்துவிடுவோம் என, மருந்துப் போத்தலை எடுத்துச் சென்றதாகவும், அதன் போது, பிள்ளைகள் நினைவுக்கு வந்ததால், அதனையும் வீடுக்குள் ஒழித்து வைத்து விட்டதாகவும், கிருஸ்ணகீதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெலிற் மற்றும் சில தடையங்களைத் தவிர, எல்லாவற்றையும் தானே கொண்டுசென்றதாகவும், கொலையை தான் மட்டுமே மேற்கொண்டதாகவும், சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் அனைத்தையும் காட்ட முடியும் எனவும், கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Leave a comment