தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த10 நாட்களில் இந்த மழை இருக்கும். கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது.இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப்பகுதியில் மழை தனது பணியைச் செய்ய இருக்கிறது.
அடுத்த சில நாட்களுக்கு, அதாவது நாள்தோறும் கூட தமிழகத்திலும், சென்னையிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்குக் கனமழை இருக்காது.
கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிககனமழை இருக்காது.இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.