திலீபனின் தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோரை அச்சுறுத்தியமைக்கு யாழ்.மாநகர சபையில் கண்டனம்!

240 0

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது , யாழ்.மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தியமைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? “ , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? “ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்தப் பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர்.

அதனால் , வேலி அடைக்கும் மிகுதிப் பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை பூரணப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment