மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு!

456 0

28 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மீள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் சிறிலங்கா பிரதமர் அலுவலகத்தின் விசேட ஆளணியினர் மயிலிட்டி துறைமுகத்திற்கு நேரில் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்கள்.

மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய குழுவினரால் வழங்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறித்து பிரதேச மக்களின் கருத்தினை நேரில் கேட்டறிவதுடன் துறைமுகப்பகுதியை பார்வையிடுவதற்காகவும் இவ் விசேட ஆளணியினர் வருகை தந்துள்ளார்கள்.

பிரதமர் அலுவலக விசேட ஆளணிக்கு தலைமையேற்று வந்திருந்த அதிகாரி மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருபவர்களிடத்தே தற்போதைய தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்திருந்தார். குறிப்பாக மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு திட்டத்தில் ஐஸ் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் இல்லை. மாறாக குளிரூட்டப்பட்ட அறை அமைப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட இதர பகுதிகளில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருபவர்கள் ஐஸ் கட்டியை பெற்றுக் கொள்வதில் பெரும் இடர்பாடுகளை தினமுன் எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். பருத்தித்துறையில் இருந்தே வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி ஐஸ் கட்டியை எடுத்துவந்து பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து கூலி ஒருபக்கமென்றால் பருத்தித்துறையில் இருந்து எடுத்துவருவதற்குள்ளாகவே 25 விழுக்காடு கரைந்து வீணாகிப்போகிறது.

இவ்விடயங்களை எடுத்துக்கூறி ஐஸ் உற்பத்தி நிலையமும் மயிலிட்டி துறைமுகப்பகுதியில் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதனை செவிமடுத்த அதிகாரிகள் மக்களின் தேவைகளை நிச்சயம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துச் சென்றார்கள்.

செய்தி மற்றும் படங்கள் : இரா.மயூதரன்.

Leave a comment