இலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்

178 0

இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் கம்மாலை முருகன் ஆலயத்தில் நேற்று அபிவிருத்தி சம்பந்தமான முக்கிய கூட்டம் இடம்பெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

ராஜபக்ச காலத்தில் இருந்த அமைச்சர் விடுதலைப் புலிகளை அழிக்க இதய வீணையைப் பயன்படுத்தினார். இன்று புலிகள் புனிதமானவர்கள் எனக் கூறுகின்றனர். ராஜபக்ச காலத்தில் அள்ளிக் கொடுக்கப்பட்ட நிதி தீவக அபிவிருத்திக்கு எனச் சொல்லப்பட்டது. ஆனால் அங்கும் அபிவிருத்தி நடந்ததா?. இதனை இன்றைய கால இளைஞர்கள் உணர வேண்டும்.

இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம். அந்த நிகழ்ச்சி நிரலை இந்த நல்லாட்சி அரசும் தொடர்வது வேதனை தரும் விடயம் . இதனை அனைத்துத் தமிழர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இலங்கை அரசில் நாடாளுமன்றில் கல்வி அறிவு படைத்தவர்கள் உள்ள அதே நேரம் கோமாளிகள் சிலரும் உள்ளனர். கோமாளிகள் சிலரின் கருத்தால் புதிய அரசியலமைப்பு வௌிவருவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.

எனினும் புதிய அரசமைப்பு விரைவில் வரும் . இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள், ஆள்கடத்தல்கள், கொலைகள் தொடர்பில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மாகாண சபை ஒன்று வரவுள்ளது. அதில் பொய் கூறுவதற்கு தயாராக சிலர் படிக்கத் தொடங்கி விட்டனர். அபிவிருத்தியும் அரசியலும் சமாந்தரமாகச் செல்ல வேண்டும். என்றார்.

நிகழ்வில் வலி தென் மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்களான க.ஜெசிந்தன்,க.அனுசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a comment