ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என துருக்கி அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரு ப்ருன்சன். பாதிரியாரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியின்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஆன்ட்ரு ப்ருன்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ ப்ருன்சனை துருக்கி அதிபர் எர்னோகன் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘சிறையில் இருந்து மரியாதைக்குரிய பாதிரியார் ஆண்ட்ரூ ப்ருன்சனை விடுவிக்காதது பெரிய அவமதிப்பு ஆகும். நீண்டகாலம் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு எர்டோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரியார் எந்த தவறும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினருக்கு அவர் தேவை’ என டிரம்ப் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.