யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய் பாதுகாவலரது குடும்பத்திற்கு சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களது பங்களிப்புடன் அவர்களது வீடானது மீள் புனரமைப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜீலை மாதம் 22ஆம் திகதி யாழ்.நல்லூர் ஆலயத்தின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது. இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் நீதிபதியின் மெய்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
மிக நீண்ட காலமாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிபதி இளஞ்செழியனின் மெய் பாதுகாவலராக இருந்த நிலையிலேயே அத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரது ஓராண்டு நினைவாக அவரது குடும்பத்தினருக்கு அவர்களது வீடானது புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் கல்வி கற்ற பாடசாலையான யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் நீதிபதியின் சக பழைய மாணவர்கள் இணைந்து 2 மில்லியன் ரூபா செலவில் அவ் வீடானது புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகள் கல்வி கற்று முடிக்கும் வரையான முழுமையான செலவினையும் தாமே ஏற்பதாக நீதிபதி இளஞ்செழியன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.