சென்னை ரெயில் தாமதம் – அரக்கோணத்தில் பயணிகள் ரெயில் மறியல்

204 0

அரக்கோணத்தில் சென்னை ரெயில்கள் தாமதமாக வருவதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 6.40 மணிக்கு விரைவு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த ரெயிலில் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மின்சார ரெயில் தாமதமாக வருகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ஏராளமான பயணிகள் சென்னை செல்வதற்காக அரக்கோணத்தில் காத்திருந்தனர்.

6.40 மணிக்கு வரவேண்டிய மின்சார ரெயில் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

அப்போது 7.30 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட் பாரத்தில் வந்தது. சென்னை ரெயிலுக்கு காத்திருந்த பயணிகள் இந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமும் ரெயில் தாமதமாக வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய பயணிகள் ரெயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்றனர்.

உடனே ரெயில்வே அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டனர். தொடர்ந்து தாமதமாக வந்த மின்சார ரெயிலில் அனைவரும் புறப்பட்டு சென்றனர். ரெயில் மறியல் போராட்டத்தால் சப்தகிரி எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக சென்றது.

மேலும் சென்னை-பெங்களூர், கோவை மார்க்கத்தில் செல்லும் ரெயில்களும் தாமதமாக சென்றன.

அரக்கோணத்தில் இருந்து தினமும் மாலை 6.05 மணிக்கு செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக செல்கிறது. இதை கண்டித்து நேற்று முன்தினம் அரக்கோணத்தில் பயணிகள் ரெயில் போராட்ட மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் தாமதமாக வருவதாக கூறி பயணிகள் மறியல் செய்தனர்.

தினமும் ரெயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காலதாமதத்தை தவிர்த்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a comment