எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த 2 பேர் பலி

237 0

எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த நிகழ்த்திய குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நேற்று முன்தினம் ஒரு பேரணியின் நிறைவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அபிய் அகமது (வயது 41) கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசி முடித்ததும், அங்கே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. மேடையில் இருந்த பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், அவர் காயமின்றி தப்பினார்.

ஆனால் இந்த குண்டுவெடிப்பில் 153 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறிது நேரத்தில் இறந்தார்.

இந்த நிலையில், மேலும் ஒருவர் நேற்று இறந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இதுபற்றிய தகவலை வெளியிட்ட அந்த நாட்டின் சுகாதார மந்திரி அமிர் அமன், “குண்டுவெடிப்பில் மேலும் ஒரு எத்தியோப்பியர் இறந்துவிட்டார் என்று தகவல் வந்து உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாகவும் 8 பேரை பிடித்து போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதாக அடிஸ் அபாபா நகர துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

Leave a comment