தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திற்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, பங்காளிகளிகளுடன் பகிராமல், தான் தோன்றித்தனமாகவும்- இயற்கைநீதிக்கு எதிராகவும்- தமிழரசுக்கட்சி தன்னிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை பங்காளி கட்சிகள் அதிகம் எதிர்க்காமல், ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தது கட்சிக்கு வாய்ப்பாக இருந்தது.
ஆனால், அண்மைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை பங்காளி கட்சிகள் தட்டிக்கேட்க ஆரம்பித்துள்ளதால், கூட்டணி தர்மத்தின் சில அடிப்படைகளையாவது பேண வேண்டிய நெருக்கடி தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ரெலோ தலைமைக்குழு கூட்டத்திலும் தேசியப்பட்டியல் ஆசனத்தை கேட்டுப்பெறுவது என முடிவாகியுள்ளது.
இதையடுத்து, தமிழரசுக்கட்சியின் செயலாளரிற்கு, எதிர்க்கட்சி தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசி, அவர்களிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை ரெலோவிற்கு வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆனால் ரெலோவிற்குள் யாருக்கு அந்த தேசியப்பட்டியல் ஆசனம் என்ற பிய்ச்சல் பிடுங்கல் நடந்து வருகிறது. ஹென்ரி மகேந்திரனா, கோவிந்தம் கருணாகரனா என்ற பிடுங்கல் அங்கு நடைபெற்று வருகிறது. கோவிந்தம் கருணாகரன் எம்.பியாகினால் தமது எதிர்காலம் சிக்கலாகிவிடும் என மட்டக்களப்பிலுள்ள தமழரசுக்கட்சி பிரமுகர்கள் யோசிப்பதாகவும், கருணாகரனிற்கு தேசியப்பட்டில் கொடுக்க சம்மதிக்ககூடாதென இரா.சம்பந்தனிடம் கூறுமாறும் கட்சி செயலாளரிற்கு அவர்கள் நச்சரிப்பு வழங்குவதாக தகவல்.