அவர் எனக்கு ராமர், அவரைத் திருமணமாகாதவர் என்று கூறலாமா?’

383 0

மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னணி குஜராத்தி நாளிதழ் ஒன்றில் பிரதமர் மோடியைத் திருமணமாகாதவர் என்று பேட்டியளித்தது குறித்து பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மோடியின் மனைவி கூறியதாவது:

“நரேந்திர மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று ஆனந்திபென் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன், 2004 தேர்தல்களின் போது வேட்புமனுத்தாக்கலின் போது தான் திருமணமானவர் என்று அவரே கூறியதோடு என் பெயரையும் குறிப்பிட்டார்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “படித்த ஆனந்திபென் இவ்வாறு கூறுவது சரியல்ல. தன் குருவைப் பற்றி அவர் இவ்வாறு கூறுதல் கூடாது. இது மட்டுமல்ல அவரது செயல்கள் பிரதமரின் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது. எனக்கு அவர் (மோடி) மீது நிரம்ப மதிப்பு உண்டு, அவர் எனக்கு ராமர்” என்று வீடியோவில் தெரிவித்தார்.

இந்த வீடியோ உண்மைதான், மோடியின் மனைவி யசோதாபென் தான் அதில் பேசினார் என்று அவரது சகோதரர் அஷோக் மோடி உறுதி செய்தார்.

“ஆனந்திபென் இவ்வாறு கூறியதை நாங்கள் முதலில் நம்பவில்லை. ஆனால் முன்னணி நாளிதழான திவ்யா பாஸ்கரில் ஜூன் 19ம் தேதி முதல் பக்கத்திலேயே இது செய்தியாக வந்தது. எனவே இது தவறான செய்தியாக முடியாது.

அதனால்தான் அவருக்கு மறுப்பு தெரிவிக்க முடிவெடுத்தோம்” என்று விளக்கம் அளித்தார்.

Leave a comment