பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

205 0

சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

ம.தி.மு.க. எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று எடப்பாடி பழனிசாமி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.

எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment