ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்!

3656 0

முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண்நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் வீதியில் மறித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. “எவ்வாறு நீ இப்படி செய்தி வெளியிடலாம் ?? நாம் புகைப்படம் எடுப்பதை செய்தியாக் வெளியிட உன்னால் எவ்வாறு முடியும் ?? உன்னை தூக்குவோம் என்ன செய்வோம் என்று தெரியுமா ? இருந்துபார் உனக்கு நாம் யார் என்று காட்டுகின்றோம் என குறித்த நுண் நிதி நிறுவன ஊழியர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தாக்குதல் மேற்கொள்ளவும் முற்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த ஊடகவியாலரால் அச்சுறுத்தல் விடுத்த நுண் நிதி நிறுவன ஊழியருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியபட்டுள்ளது.

செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கே கொலை அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு நுண் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் அராஜகம் முல்லைத்தீவில் தலை தூக்கியுள்ளதையே இந்த செயற்பாடு புலப்படுத்துகின்றது.

Leave a comment