விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் – முதல்வர் அறிவிப்பு

407 0

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்

நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.

தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment