பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்த குழு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் விசாரணைக்குழு அமைக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டனர்.

