வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க கூட்டமைப்பு இடமளிக்காது-சுமந்திரன்

226 0

தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் யாழ். அலுவலகத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுது தொடர்பாகவும், மகாவலி அதிகார சபையினால் திட்டமிட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலைமைகள் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு 2 அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

அதில் பௌத்த விகாரை அமைப்பு விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அதன் பயனாக பல விகாரைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும் புதிதாக அமைக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பௌத்தர்கள் வாழாத பகுதியில் பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்தவில்லை.

எனவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம். மேலும் மகாவலி அதிகாரசபை வடக்கு மக்களுக்கு தண்ணீர் தரட்டும். சிங்கள மக்களை தரவேண்டாம் என நான் நாடாளுமன்றில் கூறியிருக்கின்றேன்.

அண்மையில் வட மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்றிருக்கின்றனர்.

மேலும் இன்று மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து பேசுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயங்களை மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலைமைகளைப் போல் வடக்கில் ஏற்பட இடமளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment