ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து – உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

215 0

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். 

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலுங்கானா மாநிலம் உதயமான போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசு ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரமுடியாது. அதற்கு பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதை ஏற்றுக்கொள்ளாத ஆந்திர மக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி மத்திய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. 2 மத்திய மந்திரிகளும் ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேடியத்தில் குவியும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment