தமிழரசுடன் பேசிய டீல் என்ன? அம்பலப்படுத்தியது ஈபிடிபி !

233 0

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் ஈபிடிபிக்கு விட்டுக்கொடுப்பதெனவும் எழுதப்படாத ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இத்தகைய வாக்குறுதிகளை வழங்கியதாக ஈபிடிபி அமைப்பின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை அவர் பங்கெடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்

உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மத்தியகல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இத்தகைய வாக்குறுதிகளை வழங்கினர்.

கடந்த கால பகைகளை மறக்க அவர்கள் கோரியிருந்தனர். சாவகச்சேரி நகரசபையில் எமது ஆதரவை பெற்ற பின்னர் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனும் இதையே கூறியிருந்தார். ஆனால் அதனையெல்லாம் மறந்து நாம் ரத்தம் சிந்திய தீவகப்பகுதிகளை கைப்பற்ற எமக்கு எதிராக அவர்கள் களமிறங்கியதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அதற்காக கூட்டமைப்புடன் நாம் பகைமை காட்டப்போவதில்லை.மக்களிற்கான சேவைகளை ஆற்ற ஒத்துழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தமக்கு ஆதரவு கேட்டு ஈபிடிபியுடன் கூட்டமைப்புடன் எவரும் பேசவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நாம் தேவையாயின் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸின் தொலைபேசி மாதாந்த சிட்டையை காட்டத்தயார்.

வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,மாவை சேனாதிராசா,செல்வம் அடைக்கலநாதன் என பலர் பேசியிருந்தனர். ஒவ்வொருவரும் நாட்கணக்கில் மாறி மாறி பேசிக்கொண்டேயிருந்தனர்.எமது உறுப்பினரான முடியப்பு ரெமீடியஸ் வீட்டிற்கு தான் தேடி நேரே வரவாவென எம்.ஏ.சுமந்திரன் கேட்டார்.ரெமீடியஸ் மறுத்துவிட்டார்.

ஏங்களிடமும் பலரும் தொடர்ந்தும் உதவி கேட்டு தொலைபேசி வழியே அழைத்தனர்.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாடாளுமன்றில் நேரடியாக இவர்கள் உதவி கேட்டனர்.
கூட்டமைப்பினருக்கு சபைகளை கைப்பற்ற நாம் தேவை.ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமைபற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் மற்றொரு முக்கியஸ்தரான ஜீவனும் பங்கெடுத்திருந்தார்.

Leave a comment