மதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை – சந்தானம்

240 0

மாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் வரும் சனிக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக கவர்னர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் சந்தானம் தெரிவித்தார்.

மாணவிகளை பாலியலுக்கு தள்ள முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை சென்றார்.

அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு  சுற்றுலா மாளிகைக்கு சென்ற சந்தானம் அங்கு தனது விசாரணையை தொடங்கினார்.  பேராசிரியை  நிர்மலா தேவி தொடர்பான ஆடியோ பதிவை கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்கலைக் கழக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார்.

பதிவாளரை தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையும்  விருந்தினர் மாளிகை வந்தார். அவரிடமும் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

முன்னதாக  துணை வேந்தர்  செல்லத்துரை நிருபர்களிடம் கூறுகையில், நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை  கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் நான் மேற்கொண்டு எதுவும் பேச  முடியாது என்றார்.

அப்போது  நிருபர்கள், இந்த  விவகாரத்தால் காமராஜர்  பல்கலைக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதா?  என கேள்வி எழுப்பினர். அதற்கு, இது உங்களின் பல்கலைக்கழகம்  என கூறிவிட்டு துணைவேந்தர் செல்லத்துரை விசாரணை அறைக்கு சென்றுவிட்டார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் சந்தானம் தனது முதல் கட்ட விசாரணையை தொடங்குகிறார். துணைவேந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

நாளை அவர் அருப்புக்கோட்டைக்கு செல்ல உள்ளார். அங்கு தேவாங்கர்  கல்லூரி  நிர்வாகிகள் மற்றும் பாலியலுக்கு அழைக்கப்பட்ட மாணவிகளிடம் அவர் விசாரணை நடத்த உள்ளார். அவர் தன்னுடன் விசாரணைக்கு உதவியாக பெண் அதிகாரி ஒருவரையும் உடன் அழைத்து செல்ல திட்ட மிட்டுள்ளார்.

சனிக்கிழமை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளார். சுமார் 5 நாட்கள் மதுரையில் தங்கும் சந்தானம் 2 வாரத்தில் நிர்மலாதேவி தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே 30-ந்தேதிக்குள் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவர் அறிக்கையை தாக்கல் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவர்கள் , பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் விசாரணை அதிகாரி சந்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Leave a comment