சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ராம சீனுவாசன் கூறியிருப்பதாவது:-
ஏழை மாணவர்கள் இளநிலை பட்டபடிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் 2010-2011ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3 மாவட்டங்களை சேர்ந்த மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறை பட்டபடிப்பு மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.unom.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ்-2 முடிவு வெளியான 15 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 16-ந் தேதி வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், இலவச பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் மாதம் 1-ந் தேதி கடைசி நாள்.