ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று புதிய சாதனைப்படைத்துள்ளார்.
உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கோலாகலமாக நடைபெற்ற துவக்க விழாவில், 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார்.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். மேலும், காமன்வெல்த் அளவில் 6 புதிய சாதனைகள் படைத்துள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 196 கிலோ எடையை தூக்கி முதலிடத்தை பிடித்தார். மீராபாய் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமைக்குரியவர். இந்தியா இதுவரை தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
இப்போட்டியில், மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ரானாவோசா மொத்தம் 170 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இலங்கையைச் சேர்ந்த தினுஷா கோம்ஸ் 155 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.

