ஜனாதிபதி உயிரிழப்பதாக கூறிய ஜோசியருக்கு சிக்கல்

240 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என்று பொய்யாக கணித்துக் கூறிய ஜோசியர் விஜித ரோஹண விஜயமுனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது சம்பந்தமாக தீர்மானிப்பதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இந்த மனுவை எதிர்வரும் ஜூலை 09ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

Leave a comment