அஸ்வினியை கொலை செய்த அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

238 0

சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகேசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதேப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே. நகரில் கல்லூரி மாணவி அஸ்வினியை, அழகேசன் என்ற வாலிபர் நேற்று கழுத்து அறுத்து கொலை செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் அழகேசனை பிடித்து அடித்து, கட்டிவைத்து போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்களால் தாக்கப்பட்டதில் அழகேசன் படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவனிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அஸ்வினியை தான் உயிருக்கு உயிராய் காதலித்ததாகவும் அவளை செலவு செய்து படிக்க வைத்ததாகவும் போலீசாரிடம் அழகேசன் தெரிவித்தான். மேலும் காதலுக்கு அஸ்வினியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் அவள் தன்னிடம் இருந்து விலகி சென்றதாகவும் கூறியுள்ளார்.
அஸ்வினியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் அழகேசன் அங்கு வந்துள்ளார். அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை, என்னையும் கொன்று விடுங்கள் என்று போலீசாரிடம் அழகேசன் இன்று கூறியுள்ளான். நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை. எனக்கும் தண்டனை கொடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
அதன்பின் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு, மாலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் அழகேசனை போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a comment